Recent

Breaking News

அன்றன்றுள்ள அப்பம் மரண பயமில்லை!

அன்றன்றுள்ள அப்பம்

மரண பயமில்லை!

"இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" (யோவா. 14:30).






விதைக்கிறவன், விதைக்கிற விதையை வீணாக்கும்படி, ஆகாயத்துப் பறவைகள் போல பிசாசு வந்து, வசன விதைகள் உள்ளத்தில் முளைத்தெழும்பாதபடி அவை களை பொறுக்கியெடுத்துக் கொண்டு போகிறான். மரண நேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரியைப்போல உலகத்தின் அதிபதியான பிசாசானவன் வந்து உங்களை சோதிக்கக்கூடும். ஒரு தேசம் விட்டு இன்னொரு தேசம் போகும்போது, அங்குள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகள், உங்களுடைய பெட்டியை சோதித்து அறிகிறார்கள்.

 அதுபோல சாதத்தானும் உங்கள் பெட்டியாகிய வாழ்க்கையில், உலக நேசம் இருக்கிறதா? உலக ஞானம் இருக்கிறதா? உலக ஐக்கியம் இருக்கிறதா? உலகத் தின் ஆசாபாசங்களோடு உறவு உண்டா? என்பதையெல்லாம் சோதிப்பான். இயேசு கிறிஸ்து தைரியமாய் சொன்னார், "உலகத்தின் அதிபதிக்கு, என்னிடத்தில் ஒன்று மில்லை. என்னுடைய வாழ்க்கை திறந்த நிருபமாயிருக்கிறது." அவர் குற்றம் அறியாதவர். பாவம் செய்யாதவர். என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும் என்று சவாலாக கேட்டார். உலகத்தால் கறைபடாத, மாசில்லாத வாழ்க்கை வாழ்ந்து தன்னைக் காத்துக்கொண்டார்.

இரண்டு காரியங்கள் எப்பொழுதும் உங்களை எதிர்நோக்கியிருக்கிறது. ஒன்று, உங்களது மரணம். அடுத்தது, கர்த்தருடைய வருகை. இவை இரண்டும் எப்பொழுது நேரிடும் என்பது மனுஷருடைய அறிவுக்கு எட்டாத இரகசியமாகவேயிருக்கிறது. அந்த நேரம் சாத்தான் உங்களை சோதிக்க வரும்போது, நீங்கள் தைரியமாய் அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லையென்று சொல்ல முடியுமா?

மார்ட்டின் லூத்தரின் மரண நேரத்தில் சாத்தான் வந்து, மார்ட்டின் லூத்தரின் பாவப் பட்டியல்களை அவருக்குக் காண்பித்தான். எத்தனையோ அருவருப்பான, பச்சையான பாவங்கள் அதில் எழுதப்பட்டிருந்தன. அப்பொழுது மார்ட்டின் லூத்தர், அருகிலிருந்த சிகப்பு நிற மை குடுவையைப் பாவ பட்டியலுக்கு நேராய் வீசியெறிந்தார். கீழே, "இயேசுவின் இரத்தம், சகல பாவங்களையும் நீக்கி என்னை சுத்திகரித்திருக்கிறது" என்று எழுதினார்.

யார் எவ்வளவு பெரிய செல்வந்தனானாலும், எவ்வளவு படித்தவர்களாயிருந் தாலும், அளவற்ற ஞானமுள்ளவர்களாயிருந்தாலும்,மரணம் எதிர்பாராத நேரத்தில் நடக்கக்கூடும். "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு" என்பது பழமொழி. மரண நேரத்தில் ஒருவனுடைய ஜீவன், நாசி வழியாய் வெளியேறுகிறது. இருதயத்துடிப்பு நின்று போகிறது. இரத்தம் உறைந்துவிடுகிறது. சரீரத்தில் எந்த பகுதியும் வேலைச் செய்வ தில்லை. அந்த மனிதனுடைய ஜீவனும், ஆத்துமாவும் வெளியேறுகிறது. அப்போது அவனுடைய ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்குத் திரும்புகிறது. அவனுடைய ஆத்துமா நித்தியத்தை நோக்கிச் செல்கிறது.

தேவபிள்ளைகளே, உலகத்திலே வாழும் வாழ்க்கை எழுபது அல்லது எண்பது வருஷமோதான். ஆனால் உங்களுடைய வாழ்க்கையை, கிறிஸ்துவுக்குள் ஒரு விதையாக விதைப்பீர்களென்றால், மறுபடியும் பிறந்த அனுபவம் உங்களுக்கு இருக்குமென்றால், நித்தியத்தை மகிழ்ச்சியோடு சந்திக்கலாம். "மரித்தேன், ஆனா லும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்" என்று முழங்கியவரின் கரங்களைப் பிடித்துக்கொண்டு வெற்றி நடை போடலாம்.

நினைவிற்கு:- "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக் கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" (யோவா. 11:25,26).


No comments