Skip to main content

இந்தியா வந்த தோமா

இந்தியா வந்த தோமா

தோமா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முக்கியமானவர். அவருக்கு சந்தேக தோமா என்னும் பெயரும் உண்டு. காரணம், இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்குக் காட்சியளித்ததை தோமா நம்பவில்லை. தோமாவைத் தவிர மற்று அனைவரும் அறையில் கூடியிருக்கையில் இயேசு அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு தன்னுடைய உயிர்ப்பை உறுதிப்படுத்தினார். இதை தோமா நம்பவில்லை. தான் இயேசுவை நேரில் கண்டால் கூட நம்பமாட்டேன், அவருடைய கைகளில் உண்டான ஆணிக்காயங்களில் என்னுடைய விரலை விடவேண்டும், அவருடைய விலாவில் ஏற்பட்ட ஈட்டிக் காயத்தில் என்னுடைய கைகளை விடவேண்டும் பின்பே நம்புவேன் என்று கூறினார். இயேசுவைப் போல வேடமிட்டு ஒருவர் வந்தால் கூட கைகளில் துளையும், விலாவில் ஆழமான காயமும் இருக்க முடியாது என்பது அவருடைய நம்பிக்கை.

தோமா சந்தேகத்தை வெளியிட்ட எட்டாவது நாள் மீண்டும் அவர்களுக்கு முன்பாக இயேசு தோன்றினார். அங்கே தோமாவும் இருந்தார். இயேசு தோமாவைப் பார்த்து, வா.. வந்து உன் விரல்களை என் கைகளின் காயத்திலும், கைகளை என் விலா காயத்திலும் இட்டு உன்னுடைய நம்பிக்கையின்மையை போக்கிக் கொள் என்றார். தன் கைகளை தோமாவின் முன்னால் நீட்டினார். அவருடைய கைகளின் காயம் அவர் கண்களுக்கு முன்னால் நின்றது. விலாவை காட்டினார். விலாவின் ஈட்டிக் காயம் தோமாவின் கண்களுக்குள் விழுந்தது. உடனே காலில் விழுந்தார் தோமா. என் ஆண்டவரே என் கடவுளே .. என்று கதறினார்.

இயேசுவின் அப்போஸ்தலர்கள் யாருமே இயேசுவை என் ஆண்டவரே, என் கடவுளே என்று அழைப்பதாக விவிலியம் சொல்லவில்லை. ஆனால் தோமா அறிக்கையிடுவதைச் சொல்கிறது. அப்படிப் பார்க்கையில் தோமாவின் நம்பிக்கை மற்றவர்களின் நம்பிக்கையை விட ஆழமானதாய் தோன்றுகிறது. எந்த அளவுக்கு அவர் இயேசுவைச் சந்தேகித்தாரோ, அந்த அளவுக்கு அவருடைய நம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டார்.

இந்த தோமா தான் கிறிஸ்தவம் இந்தியாவில் நுழைய முதல் காரணமானவர் !

தோமாவின் வாழ்க்கை குறித்த தகவல்கள் தோமாவின் பணி என்னும் நூலில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. எடெசா என்னும் பகுதியில் வாழ்ந்த லிசியஸ் என்பவரால் சிரியா மொழியில் எழுதப்பட்டது தான் இந்நூல். இந்நூல் கி.பி 200 ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் அப்போஸ்தலர்கள் பணி செய்ய ஆரம்பித்த நாட்களில் ஒருமுறை அனைவரும் ஒன்று கூடி எல்லோரும் தனித்தனியே பணி செய்ய வேண்டுமென்றும், யார் எங்கே பணி செய்வது என்றும் விவாதித்தார்கள். விவாதத்துக்குப் பின் அனைவரும் சீட்டு எழுதிப் போட்டு அந்த சீட்டில் எழுதப்பட்டிருக்கும் நாட்டிற்குச் சென்று பணி புரியலாம் என்று தீர்மானித்தார்கள். அதன் படி சீட்டு எடுக்கையில் தோமாவுக்கு வந்த சீட்டில் எழுந்தப்பட்டிருந்த நாட்டின் பெயர் “இந்தியா” !

தோமாவுக்கு இந்தியாவுக்குச் செல்ல விருப்பம் இல்லை. மொழி தெரியாத தேசத்தில் அவருக்கு பணி செய்யும் விருப்பம் இல்லாமல் இருந்தது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்த கலாச்சார, மத அமைப்புகளும் தோமாவை தயக்கமடையச் செய்திருக்கலாம் என்றும் கணிக்க முடிகிறது. இந்தியாவுக்குச் செல்ல முடியாது என்று தோமா மறுத்து விட்டு எருசலேமிலே சுற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே வந்தார் ஒரு வணிகர். அவருடைய பெயர் ஹப்பான். கொண்டேபோர்னஸ் என்னும் அரசனால் ஒரு நல்ல தச்சுத் தொழிலாளியைக் கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்ட இந்த ஹப்பான் எருசலேம் வந்தார். எருசலேம் வந்த ஹப்பானுக்கு தோமாவை அறிமுகப்படுத்தி வைத்தார் ஒருவர். அவர் இயேசுவே என்று இறை விசுவாசிகள் நம்புகிறார்கள்.

கப்பலில் பயணம் செய்த இருவரும் நீண்ட நாட்கள் பயணம் செய்து தட்சசீலா நகரை வந்தடைந்தார்கள். காந்தாரா அரசின் தலைநகராக விளங்கியது தான் இந்த தட்சசீலா நகர். அவர்கள் வரும் வழியில் சிந்து நதிக்கரையில் சில காலம் தங்க நேர்ந்ததாகவும் அந்த நாட்களில் சிந்து நதிக்கரையில் அவர் கிறிஸ்தவத்தைப் போதித்ததாகவும் நம்பப்படுகிறது. கி.பி 44ம் ஆண்டின் இறுதியில் அவர் இந்தியாவிற்கு வந்திருக்கக் கூடும்.

தட்சசீலா நகர் அப்போதே ஒரு பெரிய வணிக நகராக இருந்தது. பல நாடுகளிலும் உள்ள வணிகர்கள் இங்கே வியாபார நிமித்தமாக சந்தித்துக் கொள்வது வழக்கமாய் இருந்தது. அங்குள்ள மக்களுக்கும் கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் அராமிக் மொழிப் பரிச்சயம் இருந்திருக்கிறது.

தோமா அங்கேயே தன்னுடைய போதனையை ஆரம்பித்தார். இயேசுவின் வாழ்க்கை போதனைகள், அவருடைய உயிர்ப்பு போன்ற நிகழ்வுகளை தோமா மக்களுக்கு விளக்கினார். இந்தியா ஏற்கனவே தத்துவங்களாலும், பழம் பெரும் கலாச்சாரங்களாலும் நிறைந்திருந்ததால் தோமாவுக்கு போதிய வரவேற்பு இருக்கவில்லை. முதலில் வணிகத்துக்காக வந்திருந்த மக்களே அவருடைய பேச்சை நம்பினார்கள். பின் ஒரு சிலர் தோமாவின் கொள்கைகளை ஏற்றனர். மிகவும் மெதுவாகவே அவருடைய போதனை மக்களிடையே பரவியது.

இதற்கிடையில் ஹப்பான் தோமாவை அழைத்துக் கொண்டு கொண்டேபோர்னஸ் மன்னனின் முன்னால் வந்து நின்றார். மன்னன் தோமாவைப் பார்த்தான், தோமாவிடம் தனக்கு ஒரு அழகான அரண்மனையைக் கட்ட வேண்டும் முடியுமா என்று கேட்டான். தோமா ஒத்துக் கொண்டார். அவர் மன்னனை ஊருக்கு வெளியே உள்ள ஒரு விசாலமான இடத்துக்கு அழைத்து சென்று அந்த இடத்தில் அரண்மனை கட்டித் தருவதாகச் சொன்னார். அரண்மனையைச் சுற்றிலும் புல் தரைகளும், மரத்தாலான அழகிய அரண்மனையும் செய்து தருவதாக கூறிய தோமா அரண்மனை எப்படி இருக்கும் என்பதையும் விளக்க ஆரம்பித்தார்.

வெளிச்சம் உள்ளே நுழைய ஏதுவாக கதவுகள் எல்லாம் கிழக்கு நோக்கி அமைக்க வேண்டும், தெற்கு நோக்கி சன்னல்களை அமைத்தால் நல்ல காற்றோட்ட வசதி இருக்கும், தண்ணீர் வடக்கு பக்கமும், சமையல் அறைகள் தெற்குப் பக்கமும் இருக்க வேண்டும் என்று தோமா விளக்கிக் கொண்டே செல்ல மன்னனுக்கு பரம திருப்தி.

மன்னன் பணத்தை அள்ளி தோமாவிடம் வழங்கிவிட்டு சென்றார். தோமாவோ அந்த பணத்தைக் கொண்டு அருகிலிருந்த ஏழை கிராமங்களுக்குச் சென்றார். அவர்களின் தேவைகளை நிறைவேற்றினார். கிறிஸ்தவ மதத்தையும் போதித்தார். பல நோயாளிகளின் பிணிகளை அகற்றினார். பேய் பிடித்திருந்ததாய் நம்பப்பட்ட சிலரை குணமாக்கினார்.

மன்னனை அடிக்கடி சந்தித்த தோமா, அரண்மனை ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து வருவதாகச் சொல்லி பணம் வாங்கி அதை ஏழைகளுக்குக் கொடுத்தார். கடைசியில் இனிமேல் கூரை வேயவேண்டும் என்று கூறி பணம் வாங்கினார். எல்லா பணத்தையும் செலவிட்டார் தோமா. அரசனைத் தவிர வேறு யாரிடமும் அவர் பணம் வாங்கவில்லை.

மன்னனுக்கு அரண்மனையைக் காணும் ஆசை வந்தது. ஒருநாள் திடீரென அரண்மனை கட்டும் வேலை நடக்கும் இடத்துக்கு வந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிலம் இன்னும் பொட்டல்காடாகவே கிடந்தது. அரண்மனை கட்டுவதற்கான முதல் அடி கூட எடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை.

கோபத்தில் கொதித்த மன்னன் தோமாவையும், ஹப்பாரையும் உடனே வரவழைத்தார். ‘என்னுடைய அரண்மனை எங்கே ? நீங்கள் இருவருமாய் சேர்ந்து மன்னனையே ஏமாற்றி விட்டீர்களா ?’ என்று கத்தினார்.

தோமாவோ அமைதியாக, அரண்மனை கட்டியாகி விட்டது அரசரே.. என்றார்.

‘எங்கே ? இன்னும் என்னை ஏமாற்ற வேண்டாம். நான் சென்று பார்த்தேன். அங்கே எதுவும் இல்லை’ மன்னனின் கோபம் அதிகரித்தது.

‘நான் கட்டியிருக்கும் அரண்மனையை நீர் இறந்த பின்பு தான் காண முடியும்’ தோமா சொன்னார். அரசரின் கோபம் எல்லை கடந்தது. உடனே இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சில நாட்களில் மன்னன் கொண்டேபோர்னஸ் ன் தம்பி காத் மரணமடைந்தார். அவர் விண்ணகத்துக்குச் செல்கையில் அங்கே ஒரு அழகான அரண்மனை இருந்தது. காத் அருகிலிருந்த வான தூதரிடம் அந்த அரண்மனையில் தனக்கு ஒரு இடம் கிடைக்குமா என்று வினவினான். அதற்கு அந்த தேவதூதர், இல்லை.. இந்த அரண்மனை மன்னன் கொண்டேபோர்னஸ் க்காக தோமா என்பவரால் கட்டப்பட்டது. இது அவருக்கே சொந்தம் என்று சொன்னார். காத் தன்னை எப்படியாவது பூமிக்கு அனுப்பவேண்டுமென்றும் இந்த தகவலை தான் உலகிற்குச் சொல்ல விரும்புவதாகவும் சொல்ல தேவதூதர்கள் அவரை மீண்டும் பூமிக்கே அனுப்பினார்கள்.

மரணமடைந்திருந்த காத் திடீரென எழும்பினான். அவன் இறந்துபோன நிமிடங்களில் கண்ட காட்சி அவரை உலுக்கியது. கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்கள். மன்னன் கொண்டேபோர்னஸ் ஆனந்தத்தில் தம்பியைக் கட்டித் தழுவினான். அவனோ, மன்னனிடம், ‘எனக்கே தெரியாமல் இப்படி ஒரு அரண்மனையை விண்ணகத்தில் கட்டி வைத்திருக்கிறீர்களே.. அதில் ஒரு அறையையாவது எனக்குக் கொடுங்கள்’ என்று கேட்டான்.

மன்னன் அதிர்ந்தான். அவனுக்கு தம்பி எந்த அரண்மனையைச் சொல்கிறான் என்று புலப்படவில்லை. தம்பி தான் கண்ட காட்சிகளை விளக்க மன்னன் வியப்பும், நடுக்கமும் அடைந்தான். உடனடியாக தோமாவை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். தோமாவின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்ட மன்னன் உடனே கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டான். அவனுடைய தம்பியும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினான்.

இந்த செய்தி ஊருக்குள் பரவ பலர் தோமாவின் போதனைகளில் நம்பிக்கை கொண்டனர். தோமாவின் போதனை அருகிலுள்ள ஊர்களுக்கும் பரவியது. மன்னனே கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டதால் தோமாவுக்கு கொண்டேபோர்னஸ் அரசின் கீழ் இருந்த பகுதிகளில் போதனை செய்கையில் எந்த அச்சுறுத்தலும் எழவில்லை. பலதரப்பட்ட மக்கள் கிறிஸ்தவத்தில் இணைந்தார்கள்.

ஒரு கிறிஸ்தவச் சபையை தட்சசீலத்தில் ஆரம்பித்த திருப்தியுடன் தோமா தட்சசீலத்தை விட்டுப் புறப்பட்டார். ஆனால் அவருடைய திருப்திக்கு சில ஆண்டு கால நீளமே இருந்தது. கொண்டேபோர்னஸ் மன்னன் இறந்தபின் குஷணர்களால் கைப்பற்றப்பட்ட நகரம், கிறிஸ்தவர்களை வெறுக்க ஆரம்பித்தது. குஷண வம்சத்தில் வந்த கனிஷ்கரால் கிறிஸ்தவ மதம் துடைத்தெறியப்பட்டது. சென்ற நூற்றாண்டுவரை தட்சசீலத்தில் நடந்த நிகழ்வுகள் ஒரு கட்டுக்கதையாக நம்பப்பட்டு வந்தன, ஆனால் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மன்னன் கொண்டேபோர்னஸ் மற்றும் அவனுடைய தம்பி காத்-ன் உருவம் பொறிக்கப்பட்ட நாணயமும், 1935ம் ஆண்டு தட்சசீல அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சிலுவை ஒன்றும் ‘புனித தோமாவின் பணி’ என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட இந்த நிகழ்வுகள் குறித்த சிறு நம்பிக்கையை அளிக்கின்றன.

தட்சசீலாவிலிருந்து விடைபெற்ற தோமா சொகோட்டிரா தீவு வழியாக கேரளாவுக்குச் செல்ல விரும்பினார். அதன் படி முதலில் சொகோட்டிரா தீவை அடைந்தார். சொகோட்டிரா தீவில் சிலகாலம் தங்கி அங்கே கிறிஸ்தவ மதத்தை மக்களிடம் போதித்து பலரை கிறிஸ்தவர்களாக்கினார். இவர்கள் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இங்கே கிறிஸ்தவம் நன்கு வளர்ந்தது. சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்கள் இந்த தீவில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கி.பி 1542, செப்டம்பர் 18 ல் புனித சவேரியார், புனித இன்னாசியாருக்கு எழுதிய கடிதத்தில் சொகோட்டிரா தீவு வாழ் கிறிஸ்தவர்கள் பற்றிய விளக்கமான குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி 1680 ல் வின்சென்சோ மரியா என்பவர் சொகோட்டிரா தீவில் கிறிஸ்தவ மதம் அழிந்து வருவதாகக் குறிப்பிட்டார். முஸ்லிம் மதத்தவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சொகோட்டிரா தீவு வந்தபின் அங்கு மிச்சமிருந்த கிறிஸ்தவ மதமும் வேரோடு அழிந்தது.

தட்சசீலாவிலிருந்து கேரளாவுக்குப் பயணமானார் தோமா. கி.பி 52ம் ஆண்டின் இறுதியில் அவர் முசிறி துறைமுகத்தில் காலடி எடுத்து வைத்தார். அப்போது கேரளா மலபார் என்று அழைக்கப்பட்டது. சேரர்கள் அந்த நாட்டை ஆண்டு வந்தார்கள். கேரளாவுக்கு வருகை தந்த தோமா மகிழ்ந்தார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன, ஒன்று கேரளா செல்வச் செழிப்பும், வணிகச் சிறப்பும், ஏராளமான மக்களையும் பெற்றிருந்தது. இரண்டாவதாக யூதர்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள், யூதர்களுக்கென்று தொழுகைக் கூடமும் இருந்தது.

யூதர்களின் தொழுகைக் கூடத்தில் தோமா பேசினார் ! யூதர்களின் பழைய ஏற்பாட்டு நம்பிக்கைகளையும், அவற்றின் நிறைவேறுதலாக வந்தவரே இயேசு என்றும் அவர் தன்னுடைய போதனையை அமைத்துக் கொண்டார். ஏராளம் தீர்க்கத் தரிசனங்களின் நிறைவேறுதலாய் இயேசுவைக் காட்டியதால் யூதர்கள் பலர் அவரை நம்பினார்கள் கிறிஸ்தவத்தைத் தழுவினார்கள்.

யூதர்களுக்கு அடுத்தபடியாக உயர்குலம் என்று அழைக்கப்பட்ட நம்பூதிரிகளின் மேல் தோமாவின் கவனம் விழுந்தது. கல்வியறிவு பெற்ற அவர்களை மனம் மாற்றினால் அதன்மூலம் பலரை கிறிஸ்தவத்தில் இணைக்க முடியும் என்று அவர் நம்பினார். அதன்படி பல நம்பூதிரிகளை தோமா தன் வசம் ஈர்த்தார். சில ஆயிரக்கணக்கான நம்பூதிரிகள் கிறிஸ்தவத்தில் இணைந்தார்கள். மலபார் கடற்கரைப் பகுதிகளில் ஏழு சபைகளை தோமா ஏற்படுத்தினார். பள்ளூர், முசிறி, பரூர், கோட்டமங்கலம், காயல், நிர்ணம் மற்றும் கொல்லம் ஆகிய இடங்களில் அவை நிலை நிறுத்தப்பட்டன. மனம் மாறிய நம்பூதிரிகளால் அந்த சபைகள் நிர்வாகிக்கப் பட்டன.

கோட்டமங்கலத்தில் தோமா செய்ததாக சொல்லப்படும் ஒரு அற்புதம் மிகவும் சுவாரஸ்யமானது. அங்கே பிராமணர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தார்கள். ஒருமுறை அவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கையில் தோமாவும் அங்கே சென்றார். அவர்கள் தண்ணீரை செபித்து மேல் நோக்கி எறிந்து கொண்டிருந்தார்கள். தோமா அவர்களிடம் வந்து என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் செபிப்பதாகவும், கடவுளை நோக்கி தண்ணீரை தெளிப்பதாகவும் சொல்ல, அப்படியானால் அந்தத் தண்ணீர் ஏன் கீழே விழுகிறது என்று கேட்டிருக்கிறார். தண்ணீர் கீழே விழாமல் மேலேயா செல்லும் என அவர்கள் சிரித்திருக்கிறார்கள். அப்போது தோமா அவர்களிடம் ஒரு விண்ணப்பம் ஒன்றை வைத்தார்.

எல்லோரும் தண்ணீரை அவரவர் விரும்பும் தெய்வத்தை நினைத்துக் கொண்டு மேல் நோக்கி எறியவேண்டும், யார் எறியும் தண்ணீர் கீழே வரவில்லையோ அவர்களின் கடவுளே உண்மையான கடவுள் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த விண்ணப்பம்.

அவர்கள் சவாலை ஏற்றுக் கொண்டார்கள். தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டே தண்ணீரை மேல் நோக்கி எறிந்தார்கள். எல்லா தண்ணீரும் கீழே விழுந்தது. கடைசியாக தோமா எறிந்தார். கடவுளை வேண்டிக்கொண்டே அவர் எறிந்த தண்ணீர் வானத்தில் நின்றது. தோமா சுற்றிலும் பார்க்க அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். அவர்களில் பலர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். கேரளாவின் மார்த்தோமா சபை சகோதரர்களிடம் இன்றும் சொல்லப்படும் இந்தக் கதை புனித தோமாவின் பணிகள் என்னும் நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின் இப்போது தென் தமிழகத்தில் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள திருவிதாங்கோடு என்னுமிடத்தில் போதனைகளை தொடர்ந்து அங்கும் ஒரு சபையை ஆரம்பித்தார். அங்கே கி.பி 57ம் ஆண்டில் இயேசுவின் தாய் மாதாவின் பெயரில் ஒரு ஆலயம் கட்டினார் தோமா. அதற்கு அன்றைய சேர மன்னன் உதயன் சேரலாதன் முழு அனுமதியும் உதவிகளும் அளித்த செய்தி வியப்பளிக்கிறது. ‘இயேசு தர்மத்தில் சேர அரசர் குலம்’ என்னும் நூல் இவற்றை விவரிக்கிறது. கிறிஸ்தவ வரலாற்றில் மாதாவின் பெயரில் கட்டப்பட்ட முதல் ஆலயம் இது தான். இதுவே கிறிஸ்தவ வரலாற்றின் முதல் ஆலயமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

தோமா பல அதிசயச் செயல்களையும் இந்தப் பகுதிகளில் செய்திருக்கிறார். ஒருமுறை பனை மரத்திலிருந்து ஒருவன் தவறி விழ ‘அங்கேயே நில்’ என்று தோமா கைகளை உயர்த்திச் சொன்னதும் அங்கேயே நின்றிருக்கிறார். பின் தோமா செபித்து அவரை பத்திரமாகத் தரையிறக்கியிருக்கிறார். ஒருமுறை கடல் கொந்தளித்து மீனவக் கிராமங்கள் பயந்தபோது கடலை அடக்கியதாகவும், இறந்த ஒரு சிறுமிக்கு உயிர் அளித்ததாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இன்றும் கேரளாவிலுள்ள பாரம்பரியக் கிறிஸ்தவர்கள் தங்களை தோமா கிறிஸ்தவர் என்றே அழைத்துக் கொள்கிறார்கள். பாரம்பரிய வரலாற்றில் வந்திருப்பதால் அவர்கள் தங்கள் கிறிஸ்தவ விசுவாசம் பாதுகாக்கப்படுவதாகவும் கருதுகிறார்கள். அவர்களிடையே தோமாவின் நினைவு நாள் கொண்டாட்டங்கள், புனிதப் பயணக் கொண்டாட்டங்கள் போன்றவை நடைபெறுகின்றன. அவர்களிடம் தோமாவின் வரலாற்றைக் கூறும் பாரம்பரியப் பாடல்களான வீரதியன் பாடல்கள், ரப்பான் தோமை பாடல்கள் மற்றும் மார்க்கம் களியாட்டம் போன்றவையும் வழக்கத்தில் இருந்திருக்கிறது.

மலபாரில் சுமார் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய தோமா அங்கிருந்து இன்றைய சென்னை – மயிலாப்பூர் பகுதியாக இருக்கும் கோரமண்டல் பகுதிக்குப் பணியாற்றச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி மலபாரில் சபையை நம்பிக்கைக்குரிய நபர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களுக்கு சபையை வழிநடத்தும் அறிவுரைகளையும் வழங்கிவிட்டு கோரமண்டல் புறப்பட்டார். கோரமண்டல் பகுதியை அடுத்துள்ள இடங்களிலும், மதுரை, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம் போன்ற முக்கியம் வாய்ந்த இடங்களிலும் இயேசுவைப் பற்றி அறிவிக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது.

இயேசுவின் சீடர் தோமா தமிழில் பேசினார் என்பதால் தமிழர்கள் தங்கள் வரலாற்றுப் பெருமையை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்திக் கொள்ளலாம். தோமா தமிழ் மொழியைக் கற்று மக்களிடம் தமிழிலேயே உரையாற்றினார் என்பது ஆச்சரியமான செய்தி. தன்னுடைய முதுமைப் பருவம் நெருங்கி வருகையிலும் அவருடைய இறை ஆர்வம் தணியவே இல்லை. சென்னையிலுள்ள சின்னமலையில் இருந்த குகை ஒன்றை அவர் ஆழமான செபத்துக்காய் பயன் படுத்தினார். அங்கே வரும் மக்களுக்கு போதனைகள் வழங்கினார். சின்னமலைக்குச் சற்றுத் தொலைவில் பெரியமலை ஒன்றும் இருந்தது அங்கும் அவருடைய போதனைகள் தொடர்ந்தன.

மைலாப்பூர் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் அவருடைய போதனை நிகழ்ந்தது. ஏராளமான மக்கள் புதிய தகவலை ஆர்வமுடன் கேட்டார்கள். இறை செய்தியைக் கேட்பதற்கு பேதங்கள் இல்லை என்னும் நிலை கிறிஸ்தவத்தில் இருந்ததால் தோமாவின் போதனைகள் அடித்தட்டு மக்களை மிகவும் வசீகரித்தன.

ஒருமுறை தோமா சின்னமலை பகுதியில் போதித்துக் கொண்டிருக்கையில் மக்களுக்குத் தாகம் எடுத்தது. கடும் கோடைக் காலம். பக்கத்தில் நீர் நிலைகள் ஏதும் இல்லாத நிலை. தண்ணீருக்கு வேறு வழி இல்லை. தோமா செபித்தார். பின் கையிலிருந்த கோலால் பாறையை ஓங்கி அடித்தார். பாறையிலிருந்து நீர் பீறிட்டது. மக்கள் தாகம் தீர அருந்தினார்கள். தோமாவின் பெயர் பரவியது.

தோமாவின் பெயரும், கிறிஸ்தவம் என்னும் புதிய மதமும் மைலாப்பூர் பகுதியில் பரவுவதைக் கண்ட காளி கோயில் பூசாரி ஒருவர் கோபம் கொண்டார். தோமாவை ஒழித்துக் கட்டுவதற்காக தன்னுடைய குழந்தையையே கொன்று அந்த பழியை தோமாவின் மேல் போட்டான். தோமா கைது செய்யப்பட்டார். அவர் மீது தண்டனை விதிக்கும் நேரத்தில் அவர் அரசனிடம் அனுமதி கேட்டு கல்லறைக்குச் சென்றார். அங்கு சென்று அந்தக் குழந்தையை உயிர்த்தெழச் செய்தார். மக்கள் ஆச்சரியமடைந்தனர். குழந்தையிடம் தோமா, கொலையாளி யார் எனக் கேட்க குழந்தை தன் தந்தையை நோக்கிக் கையை நீட்டியது. தோமா தப்பினார்.

தோமாவின் புகழ் மேலும் பரவியது. ஒருமுறை மதகை அடைத்துக் கொண்டிருந்த யானைகளாலேயே நகர்த்த முடியாத பாரமான மிகப் பெரிய மரத் தடி ஒன்றை, தோமா தன்னுடைய இடையில் கட்டியிருந்த கயிற்றில் கட்டி இழுத்துக் கொண்டு சென்றதாகவும் அந்த தடியை வைத்து அவர் ஒரு ஆலயம் கட்டியதாகவும் தோமா வாழ்க்கை நூல் குறிப்பிடுகிறது.

காளி கோயில் பூசாரிகள் தோமாவை எப்படியும் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அதன் படி அவர்கள் தோமாவை கண்காணிக்க ஆரம்பித்தார்கள். அவர் சின்னமலையிலும், பெரியமலையிலும் தங்கும் நேரம், செபிக்கும் நேரம் போன்றவற்றைக் கவனித்தார்கள். ஒருநாள் சின்னமலையில் செபித்துக் கொண்டிருக்கையில் பூசாரிகள் அவரைத் தாக்கினார்கள். அவர் அங்கிருந்து தப்பி பெரியமலைக்குச் சென்றார். அங்கு சென்று அங்கிருந்த கற்சிலை ஒன்றை கட்டி அணைத்தபடி செபிக்கத் துவங்கினார். அவரைத் தேடி வந்த பூசாரிகள் அவரைக் கொல்ல இது தான் தக்க சமயம் என்று தீர்மானித்தார்கள்.

ஈட்டி ஒன்று தோமாவைக் கிழித்தது. இதயப் பகுதியில் இறங்கிய ஈட்டி உயிரை வெளியேற்றியது. கி.பி 65ல் மயிலாப்பூர் வந்த தோமா கி.பி 72ம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் தியதி மரணமடைந்தார். சுமார் இருபத்தொன்பது வயதானபோது இயேசுவின் சீடராக மாறியவர் இந்த தோமா. புனித தோமாவின் பணி, தோமாவின் நற்செய்தி, தோமாவின் திருவெளிப்பாடு போன்ற நூல்கள் தோமாவின் வரலாறை நாம் அறிய நமக்குத் துணை நிற்கின்றன

Comments

Solomon said…
1 பேதுரு 5

6: ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
Humble yourselves therefore under the mighty hand of God, that he may exalt you in due time: (KJV)

Popular posts from this blog

ASH WEDNESDAY | what is ash wednesday in the bible

ASH WEDNESDAY  | what is ash wednesday in the bible Ash Wednesday is the first day of Lent. Its official name is "Day of Ashes," so called because of the practice of rubbing ashes on one's forehead in the sign of a cross. Since it is exactly 40 days (excluding Sundays) before Easter Sunday, it will always fall on a Wednesday- there cannot be an "Ash Thursday" or "Ash Monday." The Bible never mentions Ash Wednesday-for that matter, it never mentions Lent. *Lent* is intended to be a time of *self-denial*, *moderation*, *fasting*, and the *forsaking of sinful activities* and habits. *Ash Wednesday* commences this period of spiritual discipline. *Ash Wednesday* and *Lent*are observed by most Catholics and some Protestant denominations. The Eastern Orthodox Church does not observe Ash Wednesday; instead, they start Lent on "Clean Monday." While the Bible does not mention Ash Wednesday, it does record accounts o...

அன்றன்றுள்ள அப்பம் விசேஷ அறிவு!

அன்றன்றுள்ள அப்பம் விசேஷ அறிவு! "எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்" (சங். 90:12). இது ஒரு சிறு ஜெபம்தான். அபூர்வமான ஜெபம். சிந்திக்க வைக்கும் வித்தியாசமான ஜெபம். "பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்று ஆயக்காரன் ஜெபித்த ஜெபம், அவனையும் நீதிமானாக்கிற்று. என் எல்லைகளை விரிவாக்க வேண்டும் என்று யாபேஸ் செய்த சிறு ஜெபம், அவர் வேண்டிக்கொண்டதை கர்த்தரிடத்தில் பெற்றுத் தந்தது. வானத்திலிருந்து அக்கினி இறங்கும்படியாக எலியா ஜெபித்த சிறு ஜெபம், கர்மேல் பர்வதத்திலே மிகப் பெரிய எழுப்புதலை உண்டாக்கிற்று. கண்கள் பிடுங்கப்பட்ட நிலைமையிலே, சிம்சோன் ஜெபித்த ஜெபம், இழந்துபோன பெலனை திரும்பக் கொண்டு வந்தது. அதேநேரம், "எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தரு ளும்" என்று உள்ளமுருகி ஜெபித்தார் மோசே பக்தன். அவருடைய இந்த ஜெபம் 90-ம் சங்கீதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியானால், அந்த ஜெபம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்! அவர் ஒரு தேவ மனுஷன். வேதத்தில் ஏழுபேர் தேவனுடைய மனுஷர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 1. மோசே (...