Recent

Breaking News

மறுரூபமாக்கிடும் மகிமையின் தேவனே

மறுரூபமாக்கிடும் மகிமையின் தேவனே



நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். - (2கொரிந்தியர் 3:18).

ஒருவண்ணத்துப்பூச்சியை பார்க்கும்போது, அதுதான் எத்தனை அழகு! எத்தனை வண்ணங்கள்! அது வண்ணமயமான தன் சிறு சிறகுகளை அடித்துப் பறக்கும்போது அதன் அழகில் மயங்காதவர்கள் யார் இருக்க முடியும்? அந்த அழகிய வண்ணத்துப்பூச்சியை கர்த்தரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் அது ஆச்சரியமு
ம், அழகுமாயிருக்கும்!


ஒரு வளர்ந்த வண்ணத்துப்பூச்சி அதற்கு விருப்பமான இலையில் முட்டைகளையிடுகிறது. அந்த முட்டைகளைச் சுற்றிலும் பசை போன்ற ஒரு திரவத்தினால் அதை இலையுடன் ஒட்ட வைத்து விடுகிறது. நாமும் நம் பாவங்களை நமக்கு மன்னித்து, அவருடைய இரத்தத்தினால் நம்மை கழுவி, நம்மை ஏற்றுக் கொண்ட கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுடன் ஐக்கியம் வைத்துக் கொள்ள வேண்டும்.


அடுத்து, முட்டை பொரிப்பதற்காக காத்திருக்க வேண்டும். காத்திருப்பது என்பது நாம் ஒவ்வொருவரும் அனுபவித்த காரியமாக இருக்க வேண்டும். கர்த்தருடைய வேளை வரும் வரையில் நாம் எல்லாவற்றிலும் எந்த காரியத்திலும் காத்திருக்க வேண்டும்.


பின் குறித்த காலத்தில் முட்டை பொரிந்து, புழு வெளிவரும். அதன் முக்கிய வேலை சாப்பிட்டுக் கொண்டே இருப்பதுதான். உணவாக சாப்பிடுவதற்கு இலையை தேடிக் கொண்டு, அதை சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். ஆம், கர்த்தருக்குள் இப்போது அவருடைய வார்த்தைகளை உட்கொண்டு, அவற்றை வாசித்து, தியானித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


அப்படி புழுவானது சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்போது, அழகிய மாற்றம் உண்டாகிறது. முன்னிருந்த உருவத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத அழகிய வண்ணத்துப்பூச்சியாக உருமாறி விடுகிறது. அதைப்போலவே கர்த்தருடைய வார்த்தையை வாசித்து, வாசித்து, தியானித்துக் கொண்டே இருக்கும்போது, பாவ சரீரமும், பாவ சிந்தனைகளும் மாறி, நம்முடைய மனம் புதிதாகி, அற்புதமான கர்த்தர் விரும்புகிற மாற்றம் நம்மில் நிகழுகிறது.


கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்படும் ஊழியர்களை நாம் கேட்போமானால், அவர்கள் ஊழியத்திற்கு வருவதற்குமுன்பாக கர்த்தருடைய வார்த்தையை வருடக்கணக்கில் நன்கு படித்து, தியானித்து,கர்த்தருக்குள் பலன் கொண்டபிறகுதான் ஊழியத்திற்கு வந்நதாக கூறுவார்கள். அவர்கள் உட்கொண்ட வசனத்தின் மூலம் கர்த்தர் தங்களுக்கு கொடுத்த வெளிப்பாட்டையே அவர்கள் போதிக்கிறார்கள். வசனம் தெரியாமல் ஒருவரும் ஊழியராக முடியாது.


பிரியமானவர்களே, ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாற வேண்டுமென்றால் இத்தனை மாற்றங்கள் அவசியமாக இருக்கும்போது, தேவசாயலாக படைக்கப்பட்ட நாம் மறுரூபமடைய நம்மில் எத்தனை மாற்றங்கள் தேவை என்பதை சிந்தித்துப் பார்ப்போம். நாம் அவருடைய வார்த்தையினால் புடமிடப்பட்டு, பழைய சுபாவங்கள், பழைய குணாதிசயங்கள் மாற்றப்படும்போது, நொடிப்பொழுதில் மறுரூபமடைந்து கர்த்தருடைய வருகையில் காணப்படுவோம்.


அடுத்த முறை வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கும்போது, தேவன் நம்மில் அதுப்போல படிப்படியாக மாற்றத்தை கொண்டு வந்து, அவருடைய வருகையில் நாம் காணப்பட கிருபை செய்யும்படியாக ஜெபிப்போம். 'நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்'. ஆமென் அல்லேலூயா

No comments