Recent

Breaking News

கிறிஸ்தவத்தை புறக்கணிப்பது ஏன்?*




*தலித் இந்துக்களே கிறிஸ்தவத்தை புறக்கணிப்பது ஏன்?*

ஒருமுறை ஒரு இந்து சகோதரன், "சார், இயேசு கிறிஸ்து அற்புதங்கள் செய்வதால் அவரை நாங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறீர்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம். தாராளமாக உங்கள் கடவுளையும் எங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அதேபோல, மேல்மருவத்தூரில் இருக்கும் ஆதிபராசக்தியும் அற்புதம் செய்வதால் எங்கள் கடவுளையும் உங்கள் கடவுளாக வணங்கமுடியுமா சார்? நாலுமாவடிக்கு மக்கள் கூட்டமாக விடுதலையை தேடி வருவதுபோல எங்கள் கோயில்களுக்கும் கூட்டமாக மக்கள் விடுதலையைத்தேடி வருகிறார்களே சார்" என்று சாந்தமாக கேட்டார். இந்த கேள்வி என்னை மிகவும் சிந்திக்கவைத்தது. வெறுமனே அற்புதங்களை செய்துகாட்டி மதமாற்றம் செய்ய மட்டும்தான் இயேசு வந்தாரா? அப்படியானால் அற்புதங்கள் செய்யும் வலிமை உடைய எதையும் கடவுள் என்று ஏற்றுக்கொள்ளலாமா? "இறைவன் ஒருவனே" என்ற கொள்கையை கிறிஸ்தவர்களாகிய நாம் கற்றிருக்கிறோமே! கடவுள் அல்லாத சக்திகளாலும் அற்புதங்களை செய்யமுடியுமானால் உண்மையான கடவுளை அடையாளம் காண்பது எப்படி? என்றெல்லாம் அன்றே நான் தேட ஆரம்பித்துவிட்டேன்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்தபின் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்களின் பார்வைக்கு பல மணிநேரம் வைத்திருந்தார்கள். அப்போது ஒரு கிறிஸ்தவ ஊழியர் அந்த உடலின் அருகில் சென்று, "இயேசுவின் பெயரால் எழும்பி நட" என்று கட்டளையிட அம்மையாரின் உடலில் உயிர்வந்து எழும்பி நடந்தால் உலகத்தின் ஒரு பெரும்பகுதி மக்கள் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்வார்களே! ஒரு ஊழியரை அனுப்பி அப்படி செய்வது கடவுளுக்கு கடினமான காரியமா? அப்படி எல்லாம் இன்று ஏன் கடவுள் செய்யவில்லை? என்றெல்லாம் நான் சிந்தித்திருக்கிறேன்.
கிறிஸ்தவத்துக்கு எதிராக நிற்கும் இந்துத்துவ இயக்கங்களின் முக்கியமான தலைமையில் இருக்கும் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஆண்டவர் சவுலை சந்தித்ததுபோல அதிரடியாக ஒருநாள் சந்தித்தால் இந்தியாவே இயேசு கொடுக்கும் இலவச மீட்பை பணவிரயம் இல்லாமல் ஒரே நாளில் பெற்றுக்கொள்வார்களே! கடவுள் அவரை ஏன் அப்படி சந்திக்கவில்லை என்றெல்லாம் அங்கலாய்த்திருக்கிறேன்.
ஒருமுறை நற்செய்தியாளர் ஒருவர் நற்செய்தி அறிவிப்பதற்காக ஒரு இந்து சகோதரனை அணுகியபோது அவர் இவரை நோக்கி, *"கிறிஸ்தவர்கள் சாதிவெறியர்களாக இருக்கிறார்களே சார்!"* என்று சாதாரணமாக கேட்டார். அவரைப் பார்த்து, *"கிறிஸ்தவர்களைப் பார்க்காதீங்க சார்; கிறிஸ்துவைப் பாருங்க"* என்று இவர் சொன்னால், *"செத்துப்போன காமராஜர் நல்லவர் ஆனதுனால இன்றைக்கு இருக்கும் இந்த இத்துப்போன காங்கிரஸுக்கு ஓட்டுபோட சொல்றீங்களா சார்? இயேசுநாதர் நல்லவராக வாழ்ந்தார் என்பதற்காக இந்த செத்துப்போன கிறிஸ்தவத்தில் என்னை சேர்த்துவிட பார்க்கிறீர்களே சார்! இந்துக்களிடம் இருக்கும் சாதிவெறி கொஞ்சம்கூட குறையாமல் உங்களிடம் இருக்கிறது! வரதட்சணை கொடுமை வழக்குகளை கிறிஸ்தவர்கள் பதிவு செய்யும் அளவுக்கு இந்துக்கள் பதிவு செய்வதில்லையே சார்! உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறதென்று எங்களை மதமாற்றம் செய்ய வந்திருக்கிறீர்கள்?"* என்று கேட்டிருக்கிறார். அவர் கேட்ட கேள்வி எனக்கு அர்த்தமற்றதாக தெரியவில்லை. ஏனெனில், நம்மை ஏற்றுக்கொள்பவர்கள்தான் நம் கடவுளை ஏற்றுக்கொள்வார்கள் (மத் 10:40) என்றுதான் வேதமும் சொல்கிறது. நாமே புறக்கணிக்கப்பட்டு கிடக்கும்போது நம் மார்க்கம் புறக்கணிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லையே!
'பைபிள்தான் எங்கள் புனிதநூல்' என்று மார்தட்டிக்கொள்ளும் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் *நான் மேல்ஜாதி, அவன் கீழ்ஜாதி* என்னும் அசிங்கமான பாகுபாட்டைத்தான் தங்கள் அடிப்படை பண்பாடாக வைத்திருக்கிறார்கள்.
கிறிஸ்தவ திருச்சபையிலுள்ள ஒரு பையனுக்கு அதே போதனையை பின்பற்றும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்யும்போது, சபைக்குள் இருக்கும் சாதி உணர்வுள்ள பக்த சிரோமணிகள், பையன் *வேறுசாதி* என்று கூறி அந்த திருமணத்தை தடை செய்துவிடுகிறார்கள். இதில் பெரிய மனவேதனை என்னவென்றால் அந்த *போதகரே* இந்த பாகுபாட்டு பிரிவினைகளுக்கு உடந்தையாக இருக்கிறார். *கடவுள் உண்டா இல்லையா?* என்று தெரியாத ஒரு இளைஞனிடம் இருக்கும் மனமுதிர்ச்சிகூட வேதாகம கல்லூரிகளை நடத்தும் *கிறிஸ்தவ பண்டிதர்களிடம்* இல்லை என்று பிறர் குறை சொல்லும் அளவுக்கு கிறிஸ்தவம் சாதி சாக்கடைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. கிறிஸ்தவர்கள் சாதி பார்த்து திருமணம் செய்வதால், இந்துத்துவா விதைத்த சாதி என்னும் நச்சுச்செடியை *உலக இரட்சகராலேயே அழிக்க முடியாது* என்ற கருத்து மக்களிடையே பரவி, கிறிஸ்தவத்தைப் பற்றிய *வெறுப்பு அதிகமாகிவிட்டது.*
திருநெல்வேலியிலுள்ள *நாஞ்சாங்குளம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடாருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
திருநெல்வேலியிலுள்ள *டக்கரம்மாள்புரம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடாருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
சிவகாசியிலுள்ள *சாட்சியாபுரம்* என்ற ஊரில் ஒரே தெருவில் இரண்டு CSI சபைகள் இருக்கின்றன. ஒன்று *நாடாருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
மதுரையில் திருமங்கலம் என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடாருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
ஈரோடு மாவட்டம் *கோபி செட்டிப்பாளையத்தில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் *சத்தியமங்கலத்தில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.
*திருப்பூரில்* ஒன்றாய் இருந்த CSI சபை *நாடார் சபை* என்றும் *தாழ்த்தப்பட்டோர் சபை* என்றும் இரண்டாக பிரிந்துள்ளது.
உடுமலைப்பேட்டை என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடாருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
பொள்ளாச்சி என்ற ஒரே ஊரில் இரண்டு CSI சபைகள் உள்ளன. ஒன்று *நாடாருக்குரியது.* மற்றொன்று *தாழ்த்தப்பட்டோருக்குரியது.*
சில ஊர்களில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு தனி கல்லறைத் தோட்டமும், பிறருக்கு தனி கல்லறைத் தோட்டமும் ஆன்மீக போதகர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. சில ஊர்களில் ஒரே ஆலயத்தில் தலித்துகளுக்கும் மற்றவர்களுக்கும் வெவ்வேறு நேரங்களில் ஆராதனை நடக்கிறது. கிறிஸ்தவ போதகர்களே பலர் தங்கள் பெயருக்குப்பின் தங்கள் சாதியின் பெயரை எழுதுகிறார்கள். பெரும்பான்மையான கிறிஸ்தவர்களின் கல்லறையில் புதைக்கப்பட்டவரின் சாதி பெயரும் சேர்த்தே பொறிக்கப்பட்டுள்ளது. உயிரோடிருப்பவரை மட்டுமல்ல இறந்தவரையும் இந்த சாதிப்பிசாசு விட்டுவைக்கவில்லை. இது இந்தியாவில் மட்டுமல்ல; இந்திய கிறிஸ்தவர்கள் எந்தெந்த நாடுகளில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த மனநோய் பரவியிருக்கிறது.
*கிறிஸ்தவ நாடார் சங்கம், கிறிஸ்தவ முதலியார் முன்னேற்ற சங்கம், கிறிஸ்தவ பறையர் பேரவை, கிறிஸ்தவ வெள்ளாளர் பேரவை, தலித் கிறிஸ்தவ பேரவை, கிறிஸ்தவ வன்னியர் சங்கம்* என்று சாதி சங்கங்களை தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள். இதில் கொடுமை என்னவென்றால் 'இரட்சிக்கப்பட்டேன்' என்று சொல்லிக்கொள்பவர்களே அந்த சங்கங்களில் அங்கமாக இருக்கிறார்கள். எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது பாருங்கள்!
விழுப்புரம் மாவட்டம் எறையூர் என்னும் கிராமத்திலுள்ள கத்தோலிக்க சபையில் நடந்த சாதிச் சண்டையில் காவல் துறையினர் துப்பாக்கிசூடு நடத்தி பலர் உயிர் இழந்துள்ளனர். 'தாழ்த்தப்பட்டோர்' என்று தங்களை அழைத்துக்கொள்வோரின் பிணத்தை 'வன்னியர்' என்று தங்களை அழைத்துக்கொள்வோருடைய வீதி வழியாக கொண்டுபோகக்கூடாது என்று தடைவிதிக்கும் அளவுக்கு உச்சக்கட்ட சாதிவெறி உடையவர்களாக கிறிஸ்தவர்கள் அங்கே இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து மனித அவதாரமாக பிறந்ததன் சாராம்சத்தையே கிறிஸ்தவர்கள் நாம் தொலைத்துவிட்டோமே!
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த தச்சூர் என்னும் கிராமத்திலுள்ள கத்தோலிக்க சபையிலுள்ள 'தலித்துகள்' என்று தங்களை அழைத்துக்கொள்வோர் இறந்தால் அவர்களை புதைப்பதற்கு மயானபூமி, 'நாயுடு' என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆதிக்கசாதியினரால் மறுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து குரல் கொடுத்த 'தாழ்த்தப்பட்டவர்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் இராஜேந்திரன் என்பவர் ஆதிக்க சாதி கிறிஸ்தவர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் *இந்துத்துவ ஜாதிப்பேயிடம் விலைபோனவர்கள்* என்னும் அசிங்கமான உண்மை உலகுக்கே தெரிந்துவிட்டது.
தனது மகளுக்கு தனது சாதியில் வரன் கிடைக்காததால் திருமணமே ஆகாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் பல பெண்களின் பெற்றோர் பெந்தெகோஸ்தே பாஸ்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாகர்கோயிலில் ஒரு பாஸ்டருக்கு அவருடைய சாதியில் பெண் கிடைக்காததால், எனக்குத் தெரிந்து 42 வயது வரை அவருக்கு பெண் தேடிக்கொண்டிருந்தார். இது எவ்வளவு அநியாயமான கொடுமை!
சாதி என்னும் விஷத்தை உள்ளே வைத்துக்கொண்டே வெள்ளை நிற ஆடை அணிந்துவிடுவதால் பிறர் நம்மை *புனிதமானவர்கள்* என்று நம்பிவிடுவார்கள் என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சாதி விஷயத்தில் நாம் *வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகள்* என்று அல்லவா அப்பட்டமாக நிரூபிக்கிறோம்!
நான் பிறந்து வளர்ந்த குமரி மாவட்டத்தில் ஏறத்தாழ எல்லா பாஸ்டர்களும் சாதி பார்த்துதான் திருமணம் செய்கிறார்கள். பலமணி நேரம் அந்நிய பாஷையில் 'முழங்கால் யுத்தம்' செய்யும் ஜெபவீரர்களும், ஆன்மாக்களை ஆதாயம் செய்வதற்காக அற்புதப் பெருவிழாக்களில் பேசும் விசேஷ வரம் பெற்ற பராக்கிரமசாலிகளும், 'ஆவிக்குரிய வைராக்கிய வாஞ்சையுடைய பெந்தேகோஸ்தே அனுபவசாலிகளும்'கூட சாதி என்னும் பேயால் பீடிக்கப்பட்டுதான் கிடக்கிறார்கள்.
ஒருமுறை திருநெல்வேலியில் *நாடார்* என்னும் சாதி உணர்வால் பீடிக்கப்பட்ட ஒரு 'சுவிசேஷ ஊழியர்' என்னுடன் பேசும்போது, _"சென்னை பேராயத்தில் இதுவரை ஒருமுறைகூட நாடார் பேராயராக பதவி ஏற்றதில்லை. சென்னை கிறிஸ்தவர்களின் சாதிவெறியை பார்த்தீர்களா அண்ணே?"_ என்றார். உடனே நான், _"அவரை ஒரு ஊழியக்காரராக பார்க்காமல் சாதி அடிப்படையில் பாகுபடுத்தியே பார்க்கிறீர்களே! அப்படிப் பார்த்தால் திருநெல்வேலி பேராயத்தில் ஒருமுறையாவது ஒரு தலித் பேராயராக பதவி ஏற்றிருக்கிறாரா?"_ என்று கேட்டேன். இயேசுவின் இரட்சிப்பை பிறருக்கு நற்செய்தியாக அறிவிக்கும் ஒரு ஊழியருக்குள் இருக்கும் சாதி உணர்வைப் பாருங்கள்! பூமியிலே சாதி வெறியிலிருந்து மனம் திருந்தும் ஊழியர்கள் நிமித்தம் பரலோக இராஜ்ஜியத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று நினைக்கிறேன்.
ஒருமுறை "ஆதி திராவிடர்" என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவர் என்னிடம், _"அண்ணா, நாடார்கள் சாதிவெறி உடையவர்கள்; என் மகனுக்கு ஒரு நாடாரிடம் போய் பெண் கேட்டால் தரமுடியாது என்று சொல்லிவிட்டார்"_ என்றார். உடனே நான், _"அவரை விடுங்கள்; அவருக்கு சாதியத்தின் வரலாறு தெரியாது. 'சாதியம் தவறு' என்ற திருவசன விளக்கங்கள் தெரியாததால் சாதி உணர்வோடு இருக்கிறார். நீங்கள் சாதி உணர்வு அற்றவர் என்று நம்புகிறேன். உங்கள் மகளை 'அருந்ததியர்' என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவருக்கு கொடுக்கமுடியுமா?"_ என்று கேட்டேன். உடனே அவர், _"அருந்ததியர்களுக்கு என் மகளை கொடுக்கமுடியாது"_ என்றார். உடனே நான், _*"ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார். கலா. 6:7.* நீங்கள் அருந்ததியரிடம் விதைத்த வெறுப்பை நாடாரிடம் அறுவடை செய்தீர்கள், *பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே நீங்கள் பிறருக்கு செய்யுங்கள்" (மத் 7:12)* என்று இயேசுநாதர் தெளிவாக்கியிருக்கிறார். பிறர் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பும் நீங்கள் பிறரை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லவா! அதுதானே நியாயம்!"_ என்றேன். அருந்ததியர்கள் கொடிய சாதி கொடுமைகளை தங்கள் மதத்தில் அனுபவித்தாலும், அவர்கள் கிறிஸ்தவத்துக்கு வராததும், வந்த சிலர் திரும்ப இந்துத்துவத்துக்கே போனதும் 'கிறிஸ்தவர்களாக' மாறிய இவர்களைப் போன்றோரின் புறக்கணிப்பால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் முனிசெல்வம் என்ற ஒரு அருமையான சகோதரனிடம் தொலைபேசியில் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. செங்கல்பட்டில் வாழும் அவர் ஒரு வழக்கறிஞராக பணியாற்றுகிறார். *தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி* என்ற இயக்கத்தில் தீவிரமாக செயலாற்றுகிறார். அவரிடம் நான் பேசும்பொழுது, _"சகோதரரே, தீண்டாமை ஒழிக்க முனைப்பாக இருக்கும் நீங்கள், தீண்டாமையை​ கற்பித்து, நடைமுறைப்படுத்தும் இந்துத்துவாவில் ஏன் இன்னும் இருக்கிறீர்கள்"_ என்று கேட்டேன். உடனே அவர் மிகவும் மனத்தாழ்மையான குரலில், _"ஐயா, நான் கிறிஸ்தவத்திற்கு வந்தால், மற்ற கிறிஸ்தவர்கள் என்னை கிறிஸ்தவ தலித்தாகத்தான் கருதுவார்கள். எத்தனை நூற்றாண்டுகளானாலும் தாழ்த்தப்பட்டவன் என்ற பதவி என்னைவிட்டு அகலப்போவதில்லை. மேல்சாதி கிறிஸ்தவர்களால் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் படும் பாடுகள் எங்கள் அமைப்புக்கு நன்றாக தெரியுமே ஐயா. மதமாற்றத்தால் எனக்குள் என்ன மாற்றம் உருவாகப் போகிறது? அதனால் தான் இந்துவாகவே தொடர்கிறேன்"_ என்றார். மனதிற்கு மிகுந்த வலி கொடுத்த இந்த உரையாடல், என் உயிருள்ளவரை நினைவில் இருக்கும் அளவிற்கு ஆழமாக என் மனதில் பதிந்துவிட்டது. கிறிஸ்தவத்தை வெளியே இருப்போர் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா சகோதரங்களே!
காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும்போது பைபிளை கருத்தூன்றி வாசித்ததில் இயேசு கிறிஸ்துவின் மலைப்பொழிவு அவரை மிகவும் கவர்ந்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் கொள்கையால் கவரப்பட்ட காந்தி ஒருநாள் வெள்ளையர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் நுழைய முற்பட்டபோது, வெள்ளையர்கள் தங்கள் இனவெறியால் காந்தியை ஈவு இரக்கமின்றி ஆலயத்திலிருந்து வெளியே துரத்திவிட்டார்கள். அதே நாட்டில் ஒருமுறை இரயிலில் பயணம் செய்ய காந்தி முயற்சி செய்தபோது, அந்த பெட்டி வெள்ளையர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருந்ததால், வெள்ளையர்கள் தங்கள் இனவெறியால் காந்தியின் உடைமைகளையும், காந்தியையும் வெளியேற்றிவிட்டார்கள். இதுதான் இயேசுபெருமான் கிறிஸ்தவர்களுக்கு கற்றுக்கொடுத்த பண்பாடா என்று காந்தி மனம் நொந்திருப்பார் அல்லவா!
ஒருமுறை இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு ஆன்மீகப்பணியாளர் ஸ்டேன்லி ஜோன்ஸ் என்பவர் காந்தியிடம், _"காந்தியாரே, நீங்கள் உங்கள் பேச்சில் அடிக்கடி இயேசு கிறிஸ்துவின் போதனைகளை மேற்கோள் காட்டுகிறீர்கள்; ஆனால், ஏன் நீங்கள் இன்னும் கிறிஸ்தவராக மாறவில்லை?"_ என்று கேட்டார். அதற்கு காந்தி, _"நான் உங்கள் கிறிஸ்துவை விரும்புகிறேன்; ஆனால், கிறிஸ்தவர்களை விரும்பமுடியவில்லை; ஏனெனில், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப்போல இல்லை"_ என்றாராம். இப்படி கிறிஸ்தவர்கள் வரலாறு நெடுக தங்கள் இனவெறியை வெளிப்படுத்தி கடவுளை கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.
"பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் *அன்பு, பாசம், தயவு, இரக்கம், சகோதரத்துவம், சமத்துவம்* என்பவற்றைப் பற்றி மேடையில் வாய்கிழிய பேசுவார்களேதவிர, நிஜவாழ்வில் கீரியும் பாம்பும் சண்டையிடுவதைப்போல *பிரிவினைவாதிகளாக, ஜாதிவெறியோடு பிரிந்துகிடக்கும் வேடதாரிகள்தான்"* என்று பிறர் நம் உண்மை நிலையை படம்பிடித்து காட்டுகிறார்கள்.
"கிறிஸ்தவர்களில் சாதி பாகுபாடுகளே இல்லையே" என்று கிறிஸ்தவர்களில் சிலர் அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்வது என்னவென்றால், _"நான் வேலை செய்யும் இடத்தில் எல்லா சாதியினரிடமும் சகஜமாக பழகுகிறேன்; பேருந்தில் பயணம் செய்யும்போது சாதி பார்க்காமல் அமர்கிறேன்; வங்கியில் பணம் எடுக்க, ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கும்போது நான் சாதி பார்ப்பதில்லை; ஆனால், திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்ப்பேன்"_ என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், இந்துக்களிலும் பலர் இன்று அப்படித்தான் இருக்கிறார்கள். சினிமா தியேட்டர்களில், பொது மக்கள் கூடும் பொது இடங்களில், போக்குவரத்து வாகனங்களில், மதுபான கூடங்களில் எங்குமே அவர்கள் சாதி பார்ப்பதில்லையே! திருமணத்தில் மட்டும்தானே சாதி பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
இப்படிப்பட்ட நிகழ்வுகள் அன்பை மட்டுமே கொள்கையாக கொண்டிருக்கும் கிறிஸ்து போதித்த சகோதரத்துவத்தை அசிங்கமாக கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

No comments